Today's Latest News Updates In Tamil (Photo Credit : Youtube / Pixabay / @Reuters / @PallaviAlwayz X )

செப்டம்பர் 24, சென்னை (Chennai News): தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் தங்கம் ரூ.2,800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.85,000-ஐ கடந்துள்ளது. 71வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் வழங்கப்பட்ட நிலையில் மலையாளம், தமிழ், பாலிவுட் திரைப்படங்கள் விருதுகள் வென்றுள்ளன. ஆபரேஷன் நும்கூர் விசாரணையில் நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் பிரித்விராஜ் சொந்தமான 30 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. 2021 முதல் 2023 வரை தமிழ்நாடு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டு பலர் வெற்றி பெற்றுள்ளனர். அதே நேரத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகை காரணமாக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் காரில் இருந்து இறங்கி சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை இப்போது விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

தங்கம் & வெள்ளி விலை வரலாறு காணாத உச்சம் (Gold & Silver Prices Hit Record Highs) :

தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து நகை பிரியர்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கம் ரூ.2800 வரை உயர்ந்ததால், ஒரு சவரன் விலை ரூ.85,000-ஐ தாண்டியுள்ளது. இதனுடன் வெள்ளி விலையும் அதிரடியாக அதிகரித்து ஒரு கிலோ வெள்ளி ரூ.1,50,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2025-ஆம் ஆண்டில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் உச்சத்தை எட்டியுள்ளதால் பொதுமக்கள் திருமணம், விழா, சேமிப்பு போன்ற தேவைகளுக்கு நகைகள் வாங்க முடியாமல் சிரமத்தில் உள்ளனர். Kalaimamani Awards: 2021, 2022, 2023ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு.. லிங்குசாமி முதல் அனிரூத் வரை.. முழு விபரம் இதோ.! 

71வது தேசிய திரைப்பட விருதுகள் (71st National Film Awards) :

71வது தேசிய திரைப்பட விருதுகள் ஆகஸ்ட் 01 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் 71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கினார். இந்த விழாவில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் உயரிய தாதா சாகேப் பால்கே விருதை பெற்றார். தமிழ் படங்களில், பார்க்கிங் திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்பட விருதை வென்றது. அதே படத்தில் நடித்த எம்.எஸ். பாஸ்கர் சிறந்த துணை நடிகர் விருதையும், இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் சிறந்த திரைக்கதை விருதையும் பெற்றனர். மேலும், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளர் விருதை வென்று தனது இரண்டாவது தேசிய விருதை பெற்றார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் ஜவான் படத்திற்காக சிறந்த நடிகர் விருதை பெற்றார்.

ஆபரேஷன் நும்கூர் (Operation Numkhor) :

பூடான் நாட்டின் ராணுவ உயரக வாகனங்களை குறைந்த விலைக்கு ஏலம் எடுத்து இமாச்சலப் பிரதேசத்துக்கு கொண்டு வந்த சிலர் நடிகர்களை குறி வைத்து விற்பனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்கள் வெளியாகிதால் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டிருந்தனர். வாகனத்தின் மதிப்பு மற்றும் விற்பனை தொகையை மறைத்து மத்திய அரசுக்கு பண இழப்பு ஏற்படுத்தியதாக 'ஆபரேஷன் நும்கூர்' என்ற பெயரில் பல்வேறு இடங்களில் சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் பிரித்விராஜ்க்கு சொந்தமான 30 இடங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் (Kalaimamani Awards) :

தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றம் சார்பில் 2021 முதல் 2023 வரையிலான கலைமாமணி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்விருதுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் அக்டோபர் மாதத்தில் வழங்குகிறார். 2021ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை நடிகர் எஸ்.ஜே. சூர்யா, நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, சண்டைப்பயிற்சி இயக்குநர் சூப்பர் சுப்புராயன் வென்றனர். கே.ஜி.ஏ. யேசுதாசுக்கு எம்.எஸ். சுப்புலட்சுமி விருது வழங்கப்படுகிறது. 2022ம் ஆண்டு கலைமாமணி விருதுகளை நடிகர் விக்ரம் பிரபு, பாடலாசிரியர் விவேகா உள்ளிட்டோர் வென்றுள்ளனர். 2023ம் ஆண்டுக்கான விருதுகளை இசையமைப்பாளர் அனிருத், பாடகி ஸ்வேதா மோகன், நடிகர் மணிகண்டன், நடிகர் ஜார்ஜ் மரியான், நடனக் கலைஞர் சாண்டி மாஸ்டர் மற்றும் நிகில் முருகன் வென்றனர். மேலும், பாரதியார், எம்.எஸ். சுப்புலட்சுமி, பாலசரஸ்வதி ஆகியோரின் பெயரில் வழங்கப்படும் அகில இந்திய விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

பிரான்ஸ் அதிபரை நடுரோட்டில் நிறுத்திய அமெரிக்க போலீசார் (French President Stopped by US Police) :

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2025 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் நகருக்கு வந்தார். இந்த வருகையின் போது, அவர் பல்வேறு உலகத் தலைவர்களுடன் சந்திப்புகளை நடத்தினார். இதனிடையே பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் டிரம்பின் வருகை காரணமாக பிரான்ஸ் அதிபர் எமனுவேல் மேக்ரானின் காரை நடுரோட்டில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் மேக்ரான் காரிலிருந்து இறங்கி சாலையில் நடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.