Infosys IT Company (Photo Credit: Wikipedia)

ஏப்ரல் 30, பெங்களூரு (Technology News): கர்நாடக மாநிலம், பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், முன்னணி மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் (Infosys), தனது மைசூரு வளாகத்தில் பயிற்சி பெற்று வந்த 195 பேரை பணிநீக்கம் (Layoff) செய்துள்ளது. நிறுவனத்தின் உள் மதிப்பீட்டில் தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களை மூன்றாவது முறையாக பணிநீக்கம் செய்துள்ளது. நேற்று (ஏப்ரல் 29) வெளியான நிறுவனத்தின் மின்னஞ்சல்கள் மூலம் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 680 பேர் கொண்ட பயிற்சி குழுவில், 195 பேர் நீக்கப்பட்டுள்ளனர். Intel Layoffs: 20 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு.. இன்டெல் நிறுவனம் அதிரடி..!

195 பேர் பணிநீக்கம்:

இன்ஃபோசிஸ் நிறுவனத்தில், பிப்ரவரி மாதம் முதல் இதுவரை சுமார் 800 பயிற்சியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இது இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் கடந்த 4 மாதங்களில் நடைபெற்றுள்ள நான்காவது பெரிய அளவிலான பணிநீக்கமாகும். முன்னதாக பிப்ரவரியில் 300க்கும் மேற்பட்டோரும், மார்ச் மாதத்தில் 35 பேரும், ஏப்ரல் 18ஆம் தேதி சுமார் 240 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தேவை குறைந்து வருவதுதான், பணிநீக்கங்களுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. நிறுவனம் நடப்பு நிதியாண்டில் வருவாய் வளர்ச்சி 0% முதல் 3% வரை மட்டுமே இருக்கும் என்று கணித்துள்ளது. இது, அந்நிறுவனத்தின் முக்கிய சந்தைகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மையைக் காட்டுகிறது.

மாற்று ஏற்பாடு செய்த நிறுவனம்:

பணிநீக்கம் செய்யப்பட்ட பயிற்சி ஊழியர்களுக்கு, இன்ஃபோசிஸ் நிறுவனம் மாற்று ஏற்பாடுகளை செய்து வருகிறது. சுமார் 250 டிரைனிகள் அப்கிராட் (UpGrad) மற்றும் என்ஐஐடி (NIIT) போன்ற நிறுவனங்கள் வழங்கும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் இணைந்துள்ளனர். மேலும், சுமார் 150 பேர் அவுட்பிளேஸ்மென்ட் (Outplacement) சேவைகளுக்காக பதிவு செய்துள்ளனர். இன்ஃபோசிஸ் நிறுவனம். தனது பிபிஎம் (Business Process Management) பயிற்சி ஊழியர்கள் அப்கிராட் நிறுவனத்துடனும், ஐடி பயிற்சிக்காக என்ஐஐடி நிறுவனத்துடனும், ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம் பணிநீக்கம் செய்யப்பட்ட பயிற்சியாளர்கள், புதிய திறன்களைப் பெற்று வேறு வேலைவாய்ப்புகளைத் தேடிக்கொள்ள முடியும்.