ஏப்ரல் 16, கோவை (Coimbatore News): திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தம்பதி கோவிந்தராஜ் - வானதி. இவர்களது மகள் அனுப்பிரியா, கோவை இந்துஸ்தான் பாரா மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 15) மாலை மாணவி அனுப்பிரியா மருத்துவமனையின் 4வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை (Suicide) செய்து கொண்டார். இதனையடுத்து, அவரை மீட்ட மருத்துவமனையின் நிர்வாகம் அவருக்கு சிகிச்சை அளிக்க முயன்றுள்ளது. ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பீளமேடு காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். Salem News: இன்ஸ்டா காதலால் விபரீதம்; கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து.. பட்டப்பகலில் வாலிபர் வெறிச்செயல்..!
கல்லூரி மாணவி தற்கொலை:
இதுதொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அனுப்பிரியா நேற்று பணியில் இருந்த போது, உடன் பணியில் இருந்த மாணவனின் ரூ.1500 பணத்தை திருடிவிட்டதாக மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், மருத்துவமனை நிர்வாகம் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததோடு, அனுப்பிரியாவின் உடைமைகளையும் சோதனை செய்துள்ளனர். மாணவி மீது திருட்டு பழி சுமத்தி, கல்லூரி நிர்வாகம் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படும் நிலையில், மனமுடைந்த மாணவி மருத்துவமனையின் 4வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
மாணவர்கள் போராட்டம்:
இதனிடையே, மாணவியின் தற்கொலைக்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி மாணவியின் உறவினர்கள் மற்றும் உடன் பயிலும் சக மாணவர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மாணவியின் மீது பழி சுமத்திய மாணவன் மற்றும் கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனிடையே மாணவ, மாணவிகளுக்கு வரும் ஏப்ரல் 21ஆம் தேதி வரை விடுமுறை அளித்துள்ளதால், மாணவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.