Armstrang, Bahujan Samajwadi Party TN President (Photo Credit: @Sriramrpckanna1 X / Facebook)

ஜூலை 05, பெரம்பூர் (Chennai News): தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாவே அரசியல் ரீதியான புள்ளிகளின் கொடூர கொலைகளில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை தொடர்ந்து, அரசியல்கட்சி பிரமுகர்களின் மரணம் என்பது மக்களிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே நெல்லையில் காங்கிரஸ் பிரமுகர் கொலை செய்யப்பட்டதன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதிமுக பிரமுகர் சேலத்தில் கொலை:

இதனிடையே, நேற்று முன்தினம் சேலத்தை சேர்ந்த அதிமுக (Salem AIADMK Supporter Killed) பிரமுகர் சண்முகம், மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். விசாரணைக்கு பின்னர் திமுக கட்சியை சேர்ந்த பெண் கவுன்சிலரின் கணவர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் இன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அரசியல் ரீதியாக அடுத்தடுத்து நடைபெறும் கொலைகள் மக்களை பதறவைக்கும் நிலையில், தலைநகரில் மிகப்பெரிய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் (Tamil Nadu State Bahujan Samajwadi Party President Armstrong) மாநில தலைவர் கொலை:

தமிழ்நாடு மாநில பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங், இன்று மாலை நேரத்தில் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். தனது வீட்டின் அருகில் ஆதரவாளர்களுடன் நின்று பேசிக்கொண்டு இருந்த நபரை, இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் சுற்றிவளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிச்சாய்த்து தப்பி சென்றுள்ளது. இந்த கும்பலிடம் இருந்து ஆம்ஸ்ட்ராங் தப்பிச்செல்ல முயன்றும் பலனில்லாது துடிதுடிக்க கொலை நடந்துள்ளது.

6 பேர் கும்பலின் அதிர்ச்சி செயல்:

உயிருக்கு போராடிய ஆம்ஸ்ட்ராங்கை மீட்ட ஆதரவாளர்கள், உடனடியாக அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். அப்போது, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே உயிர் பிரிந்துவிட்டது என தெரிவித்துள்ளனர். இதனால் பெரம்பூர் பகுதியில் காவல்துறையினர் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் தகவல் பரிமாறப்பட்டு, சந்தேகத்திற்கு இடமான வகையில் வரும் வாகனங்களை தடுத்து கண்காணிப்பில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், ஆம்ஸ்ட்ராங் மீது பல்வேறு நிலுவை வழக்குகள் இருந்து வந்துள்ளது உறுதியாகியுள்ளதால், அவர் முன்விரோதத்தால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. முதற்கட்ட தகவலில் இந்த விபரங்கள் தெரியவந்துள்ளன. மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, குற்றவாளிகள் கைதான பின்னர் கொலைக்கான காரணம் தெரியவரும்.