DMK Protest: "பட்ஜெட்டில் ஓரவஞ்சனை" - மத்திய அரசுக்கு எதிராக திமுக பொதுக்கூட்டம்.. அறிவிப்பு.!

தமிழ்நாட்டுக்கு மத்திய பட்ஜெட்டில் அறிவிப்புகள் ஏதும் இல்லை. இதனால் மத்திய அரசு தமிழ்நாடு மக்களுக்கு மோசடி செய்துவிட்டது என கண்டித்துள்ள திமுக தலைமை, மத்திய அரசுக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்துகிறது.

DMK Protest:
Anna Arialayam (Photo Credit: @arivalayam X)

பிப்ரவரி 03, தேனாம்பேட்டை (Chennai News): இந்திய நாடாளுமன்றத்தில் 2025 - 2026ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் (Budget 2025), மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) தலைமையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி, புதிய வருமான வரி சட்டம், ஏஐ தொழில்நுட்பங்களை மருத்துவம் உட்பட பல கல்வித்துறையில் அறிமுகம் செய்தல், புதிய விமான நிலையங்கள் மற்றும் விமான வழித்தடங்கள் ஏற்படுத்துதல், விவசாயிகளுக்கான பல்வேறு அறிவிப்புகள் போன்றவை தெரிவிக்கப்பட்டு இருந்தன. Budget 2025: பட்ஜெட் 2025 அறிவிப்புகள் என்னென்ன? முழு விபரம் இதோ.! 

தமிழ்நாட்டுக்கு திட்டங்கள் இல்லை என மாநில அரசியல் கட்சிகள் ஆதங்கம்:

குறிப்பாக பீகார் மாநிலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, சில முக்கிய திட்டங்களை அம்மாநிலத்தில் செயல்படுத்தவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் தமிழ்நாட்டுக்கு நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களுக்கான அறிவிப்பு இல்லை. இது தமிழக மக்களை, தமிழ்நாட்டின் மாநில வளர்ச்சியை புறக்கணிக்கும் செயல் என திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவித்தது. அதன் கூட்டணிக்கட்சிகளும் தனது கருத்தை தெரிவித்தது. தனிநபர் வருமான வரி விஷயத்தில் அரசு தளர்வு கொடுத்தது வரவேற்கத்தக்கது எனினும், தமிழ்நாட்டுக்கு புதிய திட்டம் அல்லது நிதி பகிர்வு குறித்து அறிவிக்காதது கண்டிக்கத்தக்கது என அதிமுக பொதுச்செயலாளர் & சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் பேசி இருந்தார்.

மத்திய அரசுக்கு எதிராக பொதுக்கூட்டம்:

இந்நிலையில், திமுக தலைமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் இல்லாததை கண்டித்து, மத்திய அரசுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான திமுக தலைமை அறிவிப்பில், "நிதிநிலை அறிக்கையிலும் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்த மோடி அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் தலைமைக் கழகம் அறிவிப்பு. ஓரவஞ்சனையான நிதிப் பகிர்வு, தமிழ்நாட்டின் முக்கியத் திட்டங்கள் புறக்கணிப்பு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்குப் பிறகும், எஸ்.எஸ்.ஏ. பேரிடர் மேலாண்மை ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்காதது, ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரைக் கூட உச்சரிக்காதது என நிதிநிலை அறிக்கையிலும் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்த மோடி அரசைக் கண்டித்து வருகிற பிப்ரவரி 8, சனிக்கிழமை, மாலை தமிழ்நாடு முழுவதும் அனைத்துக் கழக மாவட்டங்களின் சார்பில் "கண்டன பொதுக்கூட்டம்" நடைபெறும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பான அறிவிப்பு:

(The above story first appeared on LatestLY on Aug 18, 1366 05:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).