Tamil Thaai Vaalthu: தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்; 1960 நினைப்புகளில் திமுக?.. மத்திய அமைச்சர் எல்.முருகன் விளாசல்.!
1960 நினைப்புகளில் திமுக இருக்கிறது, மக்கள் இன்று சுதாரித்துவிட்டார்கள். சென்னை வெள்ளத்தை திசை திருப்பும் முயற்சியில் அரசு களமிறங்கி செயல்படுகிறது என எல்.முருகன் பேட்டி அளித்தார்.
அக்டோபர் 19, சென்னை (Chennai News): தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, நேற்று கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த்தாய் (Tamil Thaai Vaalthu) வாழ்த்து பாடும்போது "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்" என்ற வரிகள் விடப்பட்டு பாடப்பட்டது. இந்த விஷயம் திமுக, காங்கிரஸ் (DMK Congress) மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள் இடையே கடுமையான எதிர்ப்பை சந்தித்து. தொடர்ந்து தமிழக விரோத எண்ணத்துடன் ஆளுநர் ஆர்.என் ரவி (RN Ravi) செயல்பட்டு வருவதாகவும் குற்றசாட்டு முன்வைப்பட்டு, பல கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
ஆளுநர் ரவி வருத்தம்:
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த ஆளுநர் ஆர்என் ரவி, "முதல்வர் இன்று மாலையில் வெளியிட்ட வருத்தமளிக்கக் கூடிய பதிவு ஒன்றில், எனக்கு எதிராக இனவாத கருத்தைத் தெரிவித்து, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நான் அவமரியாதை இழைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஒவ்வொரு விழாவிலும் நான் தமிழ்த் தாய் வாழ்த்தை முழுமையாக பாடுவேன் என்பதையும் அதை பக்திச்சிரத்தையோடும், பெருமையோடும், துல்லியமாகவும் பாடுவேன் என்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும்.
தமிழுக்காக நான் ஆற்றிய தொண்டு:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அரசு பல்வேறு அமைப்புகளை நிறுவி தமிழ் மொழி மற்றும் அதன் பாரம்பரியத்தை தமிழ்நாடு உள்பட இந்தியாவுக்கு உள்ளேயும் உலகின் பல நாடுகளிலும் பரப்புகிறது என்பதையும் முதல்வர் நன்றாக அறிவார். பிரதமர்மோடி அவர்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கும் கூட தமிழை கொண்டு சென்றார். ஒரு பெருமைமிகு இந்தியன் என்ற முறையில், நாட்டின் தொன்மையான, வளமான மற்றும் உயிர்ப்புமிக்க மொழியான தமிழை நாட்டின் பிற மாநிலங்களில் பரப்ப நான் ஏராளமான முயற்சிகளை செய்துள்ளேன். அதில், சமீபத்திய நடவடிக்கையாக வட கிழக்கு மாநிலத்தில் தமிழை பரப்ப அஸ்ஸாம் அரசின் ஒத்துழைப்புடன் கவுஹாத்தி பல்கல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டய படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
எதிர்வினையாற்றும் கட்டாயம்:
ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது மற்றும் முதலமைச்சரின் உயர் அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் உள்ளது. தனது இனவாத கருத்துக்கள் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை அவசரகதியில் முதலமைச்சர் அவர்கள் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் நான் இருக்கிறேன்" என தெரிவித்து இருந்தார்.
ஆளுநர் ஆர்.என் ரவி விளக்கம் அளித்த பதிவு:
"மாண்புமிகு முதல்வர் திரு. @mkstalin அவர்கள் இன்று மாலையில் வெளியிட்ட வருத்தமளிக்கக் கூடிய பதிவு ஒன்றில், எனக்கு எதிராக இனவாத கருத்தைத் தெரிவித்து, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நான் அவமரியாதை இழைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஒவ்வொரு விழாவிலும் நான் தமிழ்த் தாய்…
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) October 18, 2024
எல்.முருகன் கடும் கண்டனம்:
இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் (L Murugan), இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், "காலையில் காங்கிரஸ் தமிழ்நாடு மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்கிறார். பின் திமுகவை சேர்ந்தவர்கள் கடிதம் எழுதுகிறார்கள், ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிட நல் திருநாடு என்ற வாசகம் விடுபட்டு பாடப்பட்டது குறித்து அவர்கள் மன்னிப்பும் கூறிவிட்டார்கள். இந்த விவகாரத்தில் ஆளுநரை தொடர்புப்படுத்தி பேசுவது சரியானது இல்லை. ஒவ்வொரு விஷயத்திலும் அரசியல் செய்வது நல்லதில்லை. மழை வெள்ளத்தினை திமுக அரசு சரியாக கையாளவில்லை.
அரசியலாக்க திட்டமிட்டு அவதூறு:
ஒருநாள் மழைக்கே அவர்களின் திட்டமிடல் இல்லை. இதனை மக்கள் மத்தியில் திசைதிருப்ப திமுக அரசு முயல்கிறது. இன்று கூட இண்டி கூட்டணியை சேர்ந்தவர்கள் கொஞ்சம் கூட அடிப்படை யோசனை இல்லாமல் இவ்விஷயத்தை கையாண்டுள்ளனர். சிறப்பு விருந்தினராக ஆளுநர் கலந்துகொண்டதை மட்டும் வைத்து, அவர் இருந்ததால் தமிழ்த்தாய் வாழ்த்தில் ஒரு வார்த்தையை விட்டுவிட்டு பாடியதாக கூறுவது எப்படிப்பட்டது. இந்த விஷயத்தை அரசியலாக்க வேண்டும் என்று அவர்கள் செயல்படுகிறார்கள். இது 1960 இல்லை, திமுக நினைப்பதையெல்லாம் இப்போது சாதிக்க முடியாது. மக்கள் சுதாரித்துவிட்டார்கள்.
திமுகவினர் தங்களின் சிபிஎஸ்இ பள்ளியை மூடுவார்களா?
நாம் இந்திக்கு ஆதரவாளர்களும் இல்லை, எதிர்ப்பாளர்களும் இல்லை. இந்தியை திணிக்கிறோம் என்று கூறுகிறார்கள். திமுக நிர்வாகிகள் நடத்தும் சிபிஎஸ்இ கல்வி நிறுவனத்தில் ஹிந்தி இருக்கிறது. இவர்கள் பள்ளிக்கூடத்தை இழுத்து மூடுவார்களா? அவர்கள் அதற்கு தயார் இல்லை. ஏனெனில் அவர்களுக்கு அதில் தான் வருமானம் வருகிறது. மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயலை திமுக கைவிட வேண்டும். இனியும் மக்கள் ஏமாறமாட்டார்கள். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டிய அரசியல் உள்ளது. டாஸ்மாக்கை மூடுங்கள், ஆக்கபூர்வமான அரசியல் செய்யுங்கள். சென்னை மழை வெள்ளம் குறித்த நாடகத்தை எதற்காக நடத்த வேண்டும்?. மக்களின் கவனத்தை திசைதிருப்ப முயற்சிக்க வேண்டாம். கூவம், அடையாரை சீர் செய்யாமல் நீங்கள் சென்னையை சுத்தம் செய்ய முடியாது. கடந்த 60 ஆண்டுகளாக ஆண்டுவிட்டு, அவர்களின் தவறை மறைக்க முயற்சிப்பதை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்" என பேசினார்.
தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து ஆளுநர் ரவிக்கு கண்டனம் தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி:
அறிக்கை
தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றது முதற்கொண்டு, தமிழ்நாட்டிற்கு விரோதமாகவும், தமிழர்களின் கலாச்சாரம், பண்பாட்டிற்கு எதிராகவும், தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை குலைக்கின்ற வகையில் தொடர்ந்து பேசி வருகிறார். அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் கூறப்பட்ட… pic.twitter.com/OANSeDBCCP
— Selvaperunthagai K (@SPK_TNCC) October 18, 2024
(The above story first appeared on LatestLY on Oct 19, 2024 01:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

