ஆகஸ்ட் 05, நாமக்கல் (Namakkal News): நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம், வேம்பாகவுண்டன்புதூர் பகுதியில் வசித்து வருபவர் கோவிந்தராஜ் (வயது 40). இவர் ரிக் வண்டி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கோவிந்தராஜின் மனைவி பாரதி (வயது 25). தம்பதிக்கு பிரித்திகா ஸ்ரீ (வயது 8), கிருத்திகா ஸ்ரீ (வயது 6), தேவ ஸ்ரீ (வயது 5) என மூன்று பெண் குழந்தைகளும், ஒன்றரை வயதுடைய அனீஸ்வரன் என்ற ஆண் குழந்தையும் இருக்கின்றனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்னதாக கோவிந்தராஜ் சேலம் மாவட்டம் ஆத்தூரில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில் லாரி வாங்குவதற்காக ரூ.14 லட்சம் கடன் பெற்றுள்ளார்.
கடன் வாங்கி வீடு கட்டிய தந்தை :
இந்த தொகையை வைத்து அவர் வீடு கட்டியதாக கூறப்படும் நிலையில், தொழில் செய்ய முடியாமல் தவித்து இருக்கிறார். கடனை அடைப்பதற்காக கேரள மாநிலத்தில் கூலி தொழிலாளியாகவும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த வருமானத்தில் கிடைத்த பணத்தை வைத்து நிதி நிறுவனத்திடம் கடந்த ஏழு மாதமாக ரூ.27,000 வீதம் தவணை தொகையாகவும் செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் கேரளாவில் இருந்து சொந்த ஊர் திரும்பிய கோவிந்தராஜ் உள்ளூரில் வேலை கிடைக்காமல் அவதிப்பட்டுள்ளார். Varalakshmi Viratham 2025: வரலட்சுமி விரதம் 2025 எப்போது?.. லட்சுமி தேவியின் அருள் கிடைக்க பூஜை, நல்ல நேரம், வழிபாட்டு முறை இதோ.!
வேலை கிடைக்காமல் அவதி :
மாத தவணை செலுத்துவதிலும் சிரமம் ஏற்படவே, மனமுடைந்த அவர் செய்வதறியாது திகைத்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு நேரத்தில் மனைவி மற்றும் குழந்தைகள் சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்றுள்ளனர். படுக்கையில் இருந்த கோவிந்தராஜ் மனைவி பாரதி மற்றும் ஒன்றரை வயது ஆண் குழந்தையை தனியறையில் உறங்க சொல்லியுள்ளார். பின் ஹாலில் கோவிந்தராஜ் தனது மூன்று மகளுடன் உறங்கிய நிலையில், காலை 3 மணியளவில் எழுந்தவர் மனைவி, மகன் உறங்கிக் கொண்டிருந்த அறையை வெளிப்புறமாக தாழிட்டுள்ளார்.
3 பெண் குழந்தைகளை கொடூர கொலை செய்த தந்தை :
பின் வீட்டில் இருக்கும் அரிவாளை எடுத்து வந்து உறங்கிக் கொண்டிருந்த மூன்று பெண் குழந்தைகளையும் கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளார். தூக்கத்தில் இருந்த குழந்தைகள் கதறியழுத நிலையில், அழுகுரல் சத்தம் கேட்டு பாரதி அறையில் இருந்து வெளியே வர முயன்றபோது கதவு தாழிடப்பட்டது தெரிய வந்தது. இதனிடையே 3 குழந்தைகளையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொன்ற கோவிந்தராஜ், வீட்டில் இருந்த விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தலை துண்டித்து படுகொலை :
இந்த சம்பவத்தில் 3 குழந்தைகளும் துள்ளத்துடிக்க பரிதாபமாக தலைதுண்டிக்கப்பட்டு உயிரிழந்தன. பாரதியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் குழந்தைகள் இரத்த வெள்ளத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். கோவிந்தராஜும் சடலமாக இருந்ததால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து பாரதி மற்றும் அவரது மகனை மீட்டனர். இந்த விஷயம் குறித்து தகவலறிந்த மங்களபுரம் காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடன் பிரச்சினை காரணமாக கோவிந்தராஜ் விபரீத முடிவு எடுத்தது தெரியவந்துள்ளது.